Saturday, July 25, 2009

தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம் : வைகோ



இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நினைவரங்கம் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அந்த முகாம்களில் நாள்தோறும் 200 தமிழர்கள் உயிரிழக்கின்றனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து வந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை சிறிலங்கா அரசு வழங்காததால் அவர்கள் உணவு வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இதனால் கடந்த சில வாரங்களாக முகாம்களில் உள்ள தமிழர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு வசதிகளை செய்து தருவதற்காக இந்திய அரசு அளித்த நிதியுதவியைக் கொண்டுதான் சிங்களவர்களுக்கான குடியிருப்புக்களை சிறிலங்கா அரசு கட்டி வருகிறது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கான நிதியுதவியை இந்தியா வழங்கியது மிகப்பெரிய தவறு. இலங்கைத் தமிழ் அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நெடுமாறன்.

தொடர்ந்து உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்ய ஆயுதங்களைக் கொடுத்து உதவியது இந்தியாதான். இதையெல்லாம் அறிந்த தமிழ் மக்கள் மத்திய அரசு மீது பெரும் கோபம் அடைந்துள்ளனர்.

கைதிகளுக்கு கூட சில உரிமைகள் இருக்கும். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முகாம்களில் அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று எச்சரித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:
போர் முடிவடைந்துவிடவில்லை. தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து போர் நடக்கும். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment