நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரு இரண்டு மாடி வீட்டை பரிசாக அளித்து குருதட்சணை செலுத்தவுள்ளனர்.
மிக மிக அரிய இந்த நிகழ்வு செப்டம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. அந்த பெருமைக்குரிய தமிழாசிரியரிடம் படித்த 500 மாணவர்கள் சேர்ந்து இந்த பரிசினை அளிக்கவுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குருசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அங்குள்ள பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி 1985ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆசிரியராக இருந்த அவர் மாணவர்களுக்கு போதனை நிகழ்த்தவும், அவர்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தியதாலும், தனது சொந்த நலன் குறித்து கவலைப்படாமல் இருந்து விட்டார். விளைவு, பொருளாதாரத்தில் அவர் செழிப்பாக இல்லை.
வாடகை கூட கட்ட முடியாத நிலையில், குருசம்பாளையத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் செய்தி , அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களுக்குப் போனது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 500 பேர் ஒன்று கூடி கடந்த 2007ம் ஆண்டு ஆலோசனை நடத்தினர். தங்களை உயர்வித்த ஆசிரியருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என தீர்மானித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் வெங்கட்ராமனின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையருமான எம்.ஏ. அர்த்தநாரி கூறுகையில், கிட்டத்தட்ட 500 பேர் 2007ம் ஆண்டு ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது எங்களது ஆசிரியருக்கு ஒரு வீட்டை கட்டி அதை அவருக்குப் பரிசளிக்க முடிவு செய்தோம்.
இதையடுத்து பணம் திரட்டும் வேலைகள் தொடங்கின. தற்போது எங்களது ஆசிரியருக்காக 2 மாடிகளைக் கொண்ட வீட்டை உருவாக்கி விட்டோம்.
எங்களது ஆசிரியருக்கு பென்ஷனாக தற்போது ரூ. 9000 கிடைக்கிறது. நாங்கள் தரப் போகும் வீடு அவரது கஷ்டத்தை துடைக்கும். அதேசமயம், எங்களுக்கு நல்வழி காட்டிய ஆசிரியருக்கு நாங்கள் தரும் குருதட்சணையாகவும் அமையும்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி எங்களது ஆசிரியரிடம் வீட்டை ஒப்படைக்கவுள்ளோம். அந்த மகிழ்ச்சியான தினத்திற்காக அனைவருமே காத்திருக்கிறோம் என்றார் நெகிழ்ச்சியுடன்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவு இன்று முன்பு போல அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலை. ஆனால் தங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் நிலையை உணர்ந்து, தவித்துப் போய் அவருக்கு உதவுவதற்காக ஒரு வீட்டையே பரிசாக கொடுக்கும் இந்த மாணவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment