Thursday, August 20, 2009

ஆண்மையற்றவர் என்று தெரிந்தும் ஏமாற்றி திருமணம்: ரூ.1 கோடி ஜீவனாம்சம் கே‌ட்டு கணவர் மீது மனை‌வி வழக்கு

தான் ஆண்மை அற்றவர் என்று தெரிந்தும் என்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்டு சென்னையைச் சேர்ந்த இள‌ம்பெண் ஒருவர் தனது கணவர் மீது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சவுமியா (24) எ‌ன்பவ‌ர் குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்து‌ள்ள மனுவில், எனக்கு 7.5.2008 அன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நகை, ரொக்கம் மற்றும் திருமண செலவுகள் ரூ.11 லட்சத்துக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளது. திருமணம் முடிந்ததும் அதே மண்டபத்தில் எங்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது கணவர் மிகவும் களைப்பாக இருக்கிறது என்று கூறி படுத்து தூங்கிவிட்டார். ஆரம்பநாளே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மறுநாள் கணவர் வீட்டுக்கு போனேன். இரவு 10 மணிக்கு நாங்கள் தூங்க சென்றபோது தனது பெற்றோரை கணவர் அழைத்து தனது அருகில் படுக்குமாறு கூறினார். அவர்களும் வந்து படுத்துக்கொண்டார்கள். இப்படி ஒருவாரம் கழிந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் வேலைக்கு செல்ல தொடங்கினோம். அவர் தொடர்ந்து இரவு பணியிலே நீடித்தார். எனவே, உடலுறவு என்பதே எங்களுக்கு இடையில் நடக்கவில்லை.

இந்த நிலையில், தேனிலவுக்காக கொடைக்கானலுக்கு ஒருநாள் பயணம் சென்றோம். அப்போது அதிக குளிர் இருக்கிறது என்பதால் சூடாக பால் வாங்கி குடித்தேன். ஆனால், அந்த ஒரு நாள் முழுவதும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு அந்த நாளும் வீணாகிப் போனது. இதற்கிடையில் திருமணத்தின்போது எனது பெற்றோர் கொடுத்த ரொக்கம் மற்றும் நகைகளை குறைவாக இருப்பதாக கூறி என்னை மாமியார் குத்திக்காட்ட தொடங்கினார்.

மேலும், எனது பெற்றோரை சந்தித்து பேசுவதையும் தடுத்தனர். இந்த நிலையில், எங்களுக்கு இடையே எந்த தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை என்பதை மாமியாரிடம் சொன்னேன். ஆனால், அது ஏற்கனவே அவருக்கு தெரிந்தது போல் பேசினார். இது எனக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. ஒருநாள் படுக்கையறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஜன்னலை கவனித்தேன். அங்கு எனது மாமனார் மறைந்திருந்து பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஒருமுறை நடந்த சண்டையில் எனது கழுத்தை கணவர் நெரித்துவிட்டார். இதுபோல் மனதளவிலும், உடல் அளவிலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேதனைப்படுத்தினார்கள். இந்த நிலையில், எனது மாமியார் ஒரு தாயத்தை கொண்டு வந்து கொடுத்தார். அதைக் கட்டினால் 45 நாட்களுக்குள் கர்ப்பம் ஏற்படும் என்று கூறினார். உடலுறவு இல்லாமல் தாயத்தால் எப்படி கர்ப்பம் தரிக்க முடியும் என்று கேட்டேன்? அதற்கு அவர் இந்த குடும்பத்தில் பாரம்பரியமாக இந்த தாம்பத்திய பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து எனது கணவரை செக்ஸ் டாக்டர்களிடம் அழைத்துச் சென்றேன். அப்போதுதான் அவருக்கு ஆண்மைக் குறைவு பிரச்சனை இருப்பது தெரியவந்தது. எனவே, அதை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது மட்டுமில்லாமல், ஆண்மை குறைவை மறைத்து ஏமாற்றி எனக்கு திருமணம் செய்து வைத்தது பற்றி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவ‌ல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அதையடுத்து எனது கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது. அதில், எனது கன்னித்தன்மை நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு செய்யப்பட்ட ஆண்மை பரிசோதனை பற்றிய விவரங்கள் என்னிடம் யாரும் காட்டவில்லை. இனிமேல் இவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்தேன். திருமணம் செய்ததற்கான நோக்கம் நிறைவேறவில்லை. எனது திருமணம் தொடர்பான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், என்னை ஆண்மையற்ற ஒருவருக்கு அவரது பெற்றோர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டனர். எனவே, அந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், எனது கணவரிடம் இருந்து ரூ.1 கோடி ஜீவனாம்சமாக பெற்றுத் தர வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment